சுமார் பத்து பக்க மேட்டரை நச்சென்று ஒரே படத்தில் ரசிக்கும்படி செய்வதில் கார்டூன்களுக்கு என்று தனி இடம் எப்பொழுதும் உண்டு. ஆனால் இப்பொழுது கார்டூனிஸ்ட்களையே கார்டூனாக போடும் நிலை வந்து விட்டது. பெரும்பாலும் அரசியல்வாதிகளே கார்டூனிஸ்ட்களால் கலாய்க்கப்படுவதாலோ என்னமோ கார்டூனை ரசிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் கம்மி.
தமிழகத்தை பொருத்தவரை கார்டூன் பெரிய அளவில் பிரச்சனையானது எம்.ஜி.ஆர் ஆட்சியில், மதன் வரைந்து விகடனில் வெளிவந்த கார்டூனால். விகடன் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் மக்களும், பத்திரிக்கைகளும் வெகுண்டு எழுந்ததைப் பார்த்து, அதன்பின் தவறை உணர்ந்து விடுதலை செய்தனர். அந்த பிரச்சனையில் விகடன் ஆசிரியர் மானநஷ்ட வழக்கு போட்டு அதில் வென்று நஷ்டஈடும் (ஒரு ரூபாய்) பெற்றார்.
சென்ற மாதம் மம்தா பானர்ஜி தன்னை விமர்சித்து வெளியான ஒரு படத்திற்காக அதை வெளியிட்ட ஒரு பேராசியரையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளார். அந்த படத்தை கார்டூன் என்றும் சொல்லமுடியாது. போட்டோஷாப் போன்ற எடிட்டிங் சாப்ட்வேரில் மம்தா, முகுல் ராய், திரிவேதி ஆகியோரின் போட்டோ மற்றும் சத்யஜித்ரேயின் படமான சோனார் கேலா (The Golden Fortress) ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட படம். வேண்டுமானால் போட்டோடூன் என்று சொல்லலாம்.
அடுத்து, சில தினங்களுக்கு முன்பு NCERT பதினொன்றாவது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கார்டூன் அம்பேத்காரை இழிவுபடுத்துவதாக தொல்.திருமாவளவனால் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு, பின் அந்த படம் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளனர். பாடத்திட்டக்குழுவில் இருந்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ராஜினாமா செய்தனர் அதில் சுகாஸ் பல்சிகரின் அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டது. இந்தப் பிரச்சனையில் சாதி, சகிப்புத்தன்மை, பத்திரிக்கை சுதந்திரம் போன்ற பல்வேறு விஷயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
படம் சொல்லும் விஷயம்.
நமது அரசியல் சட்டத்தை உருவாக்க மூன்று ஆண்டுகள் பிடித்தனவாம்.
அதற்காக நேரு நத்தை மேல் அமர்ந்திருக்கும் அம்பேத்கார் மீது சாட்டையை சுழற்றுவது போல சங்கர்ஸ் வீக்லியில் 1949-ல் கார்டூனிஸ்ட் சங்கர் வெளியிட்ட கார்டூன்.
சாதிப்பிரச்சனை என்பது இதன் மூலமாகவோ, அல்லது வேறு எதன் மூலமாகவோ அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அதை விட்டு விடுவோம். அது இந்தியாவின் தலைஎழுத்து. ஆனால்
இந்த சட்டத்தை உருவாக்க மூன்று வருடங்கள் பாடுபட்டனர் என்று மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல், இதை உருவாக்கவா மூன்று வருடம் என்று நக்கலடிக்கும்படி கார்டூன் போட்டால் மாணவர்கள் சட்டத்தை மட்டமாக பார்க்க மாட்டார்களா?.
மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கும் போது இதெல்லாம் தேவை தானா? எல்லா காலத்திற்கும் பொருந்துவது போல் பல கார்டூன்கள் கொட்டிக் கிடக்கும் போது பழைய விஷயங்களை எதற்கு கிளறுவானேன்.
முதலில் கார்டூனை தமிழில் கேலிச்சித்திரம் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். கார்டூனில் இடம் பெறுபவர்கள், தங்களை கேலி செய்வதாக வருத்தப்படுகிறார்கள் பாருங்கள்.
மீண்டும் சந்திப்போம்...