அரசியல் ரீதியாக கலைஞரை விமர்சிப்பவர்கள் கூட இலக்கியம் என்று வரும் போது கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது. சிறந்த இலக்கியவாதியாக பல ஆண்டுகளாக வலம் வரும் கலைஞர் கருணாநிதி முரசொலி பொன்விழாவை ஓட்டி தினமும் தன் கருத்துக்களை 'சின்ன சின்ன மலர்கள்' என்ற பெயரில் எழுதி வந்தார். அதில் சில மலர்கள்.
" அளந்து பேசு ;
அதற்காக அளக்காதே!
நினைத்துப்பேசு ;
ஆனால் நினைத்ததையெல்லாம் பேசாதே! "
" அரங்கேற்றத்திலே மேதையாக யாரும்
திகழ்ந்து விட முடியாது ;
ஆனால்
அரங்கேற்றத்திலேயே " இவர்கள் மேதையாக
வருவார்களா ; இல்லையா? என்பதை அறிய முடியும். "
" அடிமையாக இருப்பவன், தனக்கு கீழே ஓர்
அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால்
உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு
உரிமையே கிடையாது "
" தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்!
காரணம் ;
இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்க்குப்
பயன்படுவதில்லை ! "
" புத்தகத்தில் உலகத்தைப் படித்தால்
அறிவு செழிக்கும் !
உலகத்தையே புத்தகமாக படித்தால்
அனுபவம் தழைக்கும் !. "
" 'நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட
மனிதரை நினைத்து விட்டால் ' என்றான் பாரதி!
என் செய்வது ;
நெஞ்சே இருப்பதில்லையே நிலைகெட்ட
மனிதர்களுக்கு !. "
" ஒருவர் எத்தனை ஆண்டு வாழ்கிறார் என்பதை
அவர் இறந்து போன நாளில் இருந்து கணக்கிட்டு
தெரிந்து கொள்ளலாம். "
" மனசாட்சி உறங்கும் போது தான்
மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. "
மீண்டும் சந்திப்போம்.